தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்வதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்: தமிழிசை பேட்டி
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 30 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழகத்தில் இந்த தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை பாரதீய ஜனதா கட்சி நடத்தி வருகிறது. தமிழக மக்களின் தேவையை நிறைவேற்ற பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்றபோது அதிகாரிகள் அதிக கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். இதே கெடு பிடியை தேர்தல் முடியும் வரை அதிகாரிகள் கடை பிடிக்க வேண்டும். பாரபட்ச மின்றியும், நேர்மையோடும் தேர்தலை நடத்த வேண்டும். பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும்.
மோடி அரசு நல்லாட்சியை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.