செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குச்சாவடி அலுவலர்களை நியமனம் செய்ய அறிவுரைகள்: மாநில தேர்தல் ஆணையம்

Published On 2016-09-10 05:52 GMT   |   Update On 2016-09-10 11:36 GMT
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனம் செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனம் செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்படும் அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அந்த உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்தவராக இருத்தல் கூடாது.

தேர்தல் பணிக்கு அமர்த்தப்படும் அலுவலர்கள் அல்லது பணியாளர்கள், அவர்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அலுவலர்களாகவோ, வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவோ பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.

மாநகராட்சி பகுதியில் ஒரு மண்டலத்தில் பணிபுரிபவர்கள் அல்லது வசிப்பவர்கள் அம்மண்டலத்திலுள்ள வாக்குச்சாவடிகள் தவிர்த்து பிற மண்டலங்களிலோ அல்லது பிற உள்ளாட்சி அமைப்புகளிலோ அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும்.

ஊராட்சி செயலாளர்கள் அல்லது கிராம ஊராட்சி பணியாளர்கள் அல்லது எவரையும் கணினி குழுக்கள் முறையில் நியமிக்கும் போது அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வசிக்கும் இடத்திலோ வாக்குப்பதிவு அலுவலர்களாகவோ அல்லது வாக்கு எண்ணுகை அலுவலர்களாகவோ நியமனம் செய்யக் கூடாது.

வாக்குச்சாவடி அலுவலர்களை தேர்வு செய்கையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் பொருட்டு அரசியல் சார்புடையவர் என அறியப்பட்டவர்கள் அல்லது முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களை தேர்வு செய்யக்கூடாது.

வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் உறவினர் என அறியவரும் போது அவரை வேறு உள்ளாட்சி அமைப்பில் உள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றிட கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்வதில் கூடுமானவரை காவல், மருத்துவர், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற இன்றியமையாத பணிகளைச் சார்ந்த துறை அலுவலர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள வாக்குச்சாவடி அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒன்று அல்லது இரண்டு பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் அல்லது ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது பாதகமாக வாக்குப்பதிவு அலுவலர்கள் செயல்படுவதைத் தவிர்த்திடும் பொருட்டு ஒரு வாக்குச்சாவடியில் வெவ்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலவையாக நியமிக்கப்படுவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளின்படி இப்பணிக்காக அரசு, உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், மாநில அல்லது மத்திய அரசை சார்ந்த நிறுவனங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றின் அலுவலர்களை நியமிக்கலாம். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News