லைஃப்ஸ்டைல்

அருமையான பட்டாணி கிரீன் மசாலா

Published On 2018-01-17 09:27 GMT   |   Update On 2018-01-17 09:27 GMT
சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த பட்டாணி கிரீன் மசாலா. இன்று இந்த மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

பச்சைப் பட்டாணி - ஒரு கப், 
வெங்காயம் - 2, 
தக்காளி - ஒன்று, 
கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, 
பச்சை மிளகாய் - 3, 
முந்திரிப் பருப்பு - 5, 
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், 
கஸ்தூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை, 
பூண்டு - 2 பல், 
பால் - அரை கப், 
[பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

பச்சைப் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். 

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லியை போட்டு வதக்கி ஆற வைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். 

முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். 

மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு சூடானதும் அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, பால் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். 

அடுத்து அதில் வெக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, உலர்ந்த வெந்தயக்கீரை சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

சப்பாத்திக்கு அருமையான பட்டாணி கிரீன் மசாலா ரெடி. 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News