லைஃப்ஸ்டைல்

வயிற்றுப் பிடிப்பு காரணமும் - தீர்வும்

Published On 2017-08-14 08:00 GMT   |   Update On 2017-08-14 08:00 GMT
மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான மனஅழுத்தம், உடல் உஷ்ணத்தால் ஏற்படுவது என வயிற்றுப் பிடிப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மாறிப்போயிருக்கும் உணவுப் பழக்கங்களால் முதலாவதாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுவது வயிறுதான். வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்னைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான மனஅழுத்தம், உடல் உஷ்ணத்தால் ஏற்படுவது என வயிற்றுப் பிடிப்புகளுக்கான காரணங்கள் பல.

சிறிது நேரம் மட்டும் வலி வந்தால் :

* அதிகப்படியான யோசனை, மனக்குழப்பம் கூட வலியை ஏற்படுத்தும். முதலில் உங்கள் மனநிலையை அமைதியாக்க வேண்டும்.

*  வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது தசைகளைச் சற்றுத் தளர்த்தி வலியைக் குறைக்கும்.

*  உட்கார்ந்திருக்கும் / படுத்திருக்கும் நிலையை மாற்றிப்பாருங்கள். வயிற்றுத் தசைகளைச் சற்று லேசாக்கிப் படுக்கலாம்.

*  இறுக்கமான ஆடை அணிந்திருந்தால், அதையும் தளர்த்திவிடுங்கள்.

*  உடனடி நிவாரணத்துக்குச் சாதம் வடித்த நீருடன் தேன் கலந்து குடிக்கலாம்; அல்லது ஒரு கப் தயிர் சாப்பிடலாம்.

தொடர்ந்து வலி வந்தால் :

*  உணவுப்பழக்கங்களில் மாற்றம் தேவை என உணருங்கள்.

*  காரமான உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*  கொழுப்புச்சத்து அதிகமுள்ள பொருள் களுக்கு ‘குட் பை’ சொல்லி விடலாம்.

*  துரித உணவுகளைத் தூர வைத்துவிடலாம்.

*  சிகரெட் மற்றும் ஆல்கஹால் கண்டிப்பாகக் கூடாது.

உடற்பயிற்சி மற்றும் யோகா :

வயிற்றுத் தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். சுய மருத்துவம் வேண்டாம். மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட வேண்டாம். இது, தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நீண்ட நாள்களுக்கு வயிற்றுப்பிடிப்பு இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம். ஏனெனில், பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் தொடர் வலி வந்தால், அது கர்ப்பப்பையில் கட்டி இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். மேலும், குடல் அழற்சி, இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்   என்கிற எரிச்சலுடன்கூடிய  குடல் நோய்க்குறி போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சாதாரண வயிற்றுப் பிடிப்புதானே என அலட்சியம் செய்யாமல், நோயின் அடுத்த நிலைக்கான அலாரமாக இருக்கலாம் என்பதை உணருங்கள்.

எவ்வளவு நேரமாக வலிக்கிறது, எந்த இடத்தில் வலிக்கிறது, வலி வருவதற்கு முன்னர் என்ன உணவைச் சாப்பிட்டோம் என ஒருமுறை சுயபரிசோதனை செய்யவேண்டும்.
Tags:    

Similar News