வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Published On 2022-08-11 07:31 GMT   |   Update On 2022-08-11 07:31 GMT
  • ஆவணித் திருவிழா வரும் 17-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.
  • திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 17-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் புகாரி தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி கமிஷனர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருவிழா நாட்களில் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வது, நகரில் 8 இடங்களில் நகராட்சி சார்பில் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைக்கப்படும். விழா நாட்களில் 120 தூய்மைப் பணியாளர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணியாற்றுவது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக 400 போலீசாரை பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும், முக்கிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்குவது, தங்கு தடையின்றி மின்சாரம் சப்ளை செய்வது, என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகாபாய், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அம்பிகாபதி, தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி. அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜசேகர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், மின்சார வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ண ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News