வழிபாடு

கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி

Published On 2022-09-06 04:49 GMT   |   Update On 2022-09-06 04:49 GMT
  • அம்பாளுக்கு பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால் வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆவணித் தபசு திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 3-ந் தேதி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக மதியம் சுவாமி, அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

மாலையில் ஒப்பனையம்மாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 3.45 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சுவாமி தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர். 6.30 மணிக்கு அம்பாளுக்கு, முகலிங்கநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜன், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் மற்றும் பக்தர்கள், மண்டகப்படிதாரர்கள் கலந்துகொண்டனர்.

இரவு 9.30 மணிக்கு அம்பாளுக்கு பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவுப்படி சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, பவுல் ஜேசுதாசன், கருப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News