வழிபாடு

நவராத்திரி விழா: சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்தநங்கை அம்மன் வருகிற 22-ந்தேதி புறப்பாடு

Published On 2022-08-25 06:45 GMT   |   Update On 2022-08-25 06:45 GMT
  • இந்தாண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்குகிறது.
  • நவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் சாமிகள் குமரி மாவட்டத்துக்கு புறப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது, இந்த விழாவில் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமிகளை வைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.

18-ம் நூற்றாண்டில் இருந்து திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அங்கு நடக்கும் நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகியவை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்தாண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது, இதில் கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன், தொல்லியல்துறை மந்திரி அகம்மது மற்றும் அதிகாரிகள், தமிழக தேவசம்போர்டு சார்பில் மராமத்து என்ஜினீயர் ராஜகுமார், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் மேலாளர் சுதர்சன குமார், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் மேலாளர் மோகனகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் வழக்கமாக நடக்கும் ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி முன்பு நடைபெற்றது போல் சாமிகளின் ஊர்வலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் 22-ந்தேதி புறப்பட்டு பத்மநாபபுரத்தை அடைகிறது. அங்கிருந்து 23-ந்தேதி காலை தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகியசாமிகள் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெறுகிறது.

அன்று இரவு குழித்துறை மகாதேவர் ஆலயத்திலும், 24-ந்தேதி நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலிலும் இரவு தங்கி விட்டு, 25-ந்தேதி இரவு திருவனந்தபுரம் சென்றடைகிறது, கோட்டைக்ககமுள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் சரஸ்வதி அம்மனும், ஆரியசாலை சிவன் கோவிலில் முருகனும், செந்திட்டை அம்மன் கோவிலில் முன்னுதித்த நங்கை அம்மனும் வைக்கப்படுகிறது. 26-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் சாமிகள் 7-ந்தேதி அங்கிருந்து குமரி மாவட்டத்துக்கு புறப்படுகிறது.

Tags:    

Similar News