வழிபாடு

திருப்பதியில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடக்கிறது

Published On 2022-11-17 07:43 GMT   |   Update On 2022-11-17 07:43 GMT
  • 1800 பக்தர்கள் தரையில் அமர்ந்து தீபம் ஏற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • தீபம் ஏற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிட மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. அதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

கார்த்திகை தீபத்திருவிழாவின் மகத்துவத்தைப் பக்தர்களுக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக வெங்கடாசலபதி, மகாலட்சுமி தாயாரை வேண்டி கார்த்திகை தீபத்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழா 18-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது. அதில் 1800 பக்தர்கள் தரையில் அமர்ந்து தீபம் ஏற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவில் பங்கேற்க வரும் பெண் பக்தர்களுக்கு துளசி செடிகளை வழங்க வேண்டும்.

அதேபோல் அஷ்ட லட்சுமி வைபவம், நடனம், தீபம் ஏற்றுதல் மற்றும் மங்கள ஆரத்தி ஆகியவை நடக்கிறது. பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை பயன்படுத்தலாம். என்ஜினீயரிங் துறையில் உள்ளவர்கள் மேடை அமைத்தல், தடுப்புகள் அமைத்தல் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் மேடையில் அழகிய மலர் அலங்காரம், மின் விளக்குகள் அலங்காரம், அகண்ட ஒளித்திரை ஆகியவற்றை அமைக்க வேண்டும். தீபம் ஏற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து தீபம் ஏற்றும் இடத்தை சதாபார்கவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News