வழிபாடு

ஏழுமலையான் கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்த காட்சி.

திருப்பதியில் கொட்டும் மழையில் கருடசேவை: பக்தர்கள் கூட்டம் குறைந்தது

Published On 2023-05-06 05:50 GMT   |   Update On 2023-05-06 05:50 GMT
  • கருட சேவையின் போது திடீரென பலத்த மழை கொட்டியது.
  • பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் உண்டியல் வருவாயும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நேற்று ரூ.300 ஆன்லைன் விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரத்திலும், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்களால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 10 அறைகள் நிரம்பியது.

இதனால் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருப்பதி மலையில் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் எழுந்தருளினார்.

பக்தர்கள் ஏழுமலையானுக்கு கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனர். கருட சேவையின் போது திடீரென பலத்த மழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 59,849 பேர் தரிசனம் செய்தனர். 30,097 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Similar News