வழிபாடு

தர்மராயசுவாமி கோவிலில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்.

பெங்களூரு தர்மராயசாமி கோவில் கரக உற்சவம் 6-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-30 05:39 GMT   |   Update On 2023-03-31 01:45 GMT
  • கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
  • இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கிறது.

பெங்களூருவில் பழமை வாய்ந்த கோவில்களில் தர்மராயசாமி கோவிலும் ஒன்றாகும். பெங்களூரு திகரளபேட்டையில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஆண்டுதோறும் தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று இரவு கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தேரோட்டத்துடன் கரக திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கரக உற்சவம் வருகிற 6-ந் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் கோவில் பூசாரியான ஞானேந்திரா தர்மராயசாமி கோவிலில் இருந்து கரகத்துடன் புறப்பட்டு செல்வார். இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வருவது உண்டு. வருகிற 6-ந் தேதி நள்ளிரவு தர்மராயசாமி கோவிலில் இருந்து புறப்படும் கரக ஊர்வலம் அக்கிபேட்டை, கும்பாரபேட்டை, நகரத்பேட்டை, கொல்லரபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவிலுக்கும், மஸ்தான்ஷாப் தர்காவுக்கும் கரகம் சென்றுவிட்டு கோவிலை வந்தடையும். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News