வழிபாடு

புனித அந்தோணியார் தேர்ப்பவனியில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

புனித அந்தோணியார் தேர்ப்பவனியில் பங்கேற்ற அனைத்து சமய பக்தர்கள்

Published On 2022-06-14 07:14 GMT   |   Update On 2022-06-14 10:48 GMT
  • ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது.
  • புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

சின்னசேலம் :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கீழைநாட்டு பதுவா புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பங்குதந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் மறை மாவட்ட அருட்தந்தையர்களால் நவநாள் திருப்பலி, புதுசிறப்பு பிரார்த்தனை மற்றும் குணமளிக்கும் வழிபாடு தினந்தோறும் நடைபெற்று வந்தது.

மேலும் மாலை நேரத்தில் முக்கிய தெருக்கள் வழியாக புனித அந்தோணியார் சொரூபம் பவனியாக வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவளி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு ஆண்டு பெருவிழா திருப்பலியை புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டம் பேராயர் பிரான்சிஸ் நடத்தி வைத்தார்.

இதையடுத்து இரவு 11 மணிக்கு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 5 ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆடம்பர தேர்பவனி அதற்கு முன்பாக புனித சூசையப்பர் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேர்கள் பவனியாக சென்றது.

அப்போது புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன. ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. இதில் சின்னசேலம் பகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மத வேறுபாடுகள் இன்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News