கீழக்கட்டளை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது
- இன்று இரவு சுவாமிக்கு அன்னம் நியமித்தலும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
- நாளை சுவாமி வீதி உலா, தர்மம் வழங்குதல் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கீழக்கட்டளை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக காலை 11 மணிக்கு முட்டப்பதியில் இருந்து பதம் எடுத்து வருதல் நிகழ்வும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், தொடர்ந்து 2 மணிக்கு உம்பான் நியமித்தலும் நடக்கிறது.
இதையடுத்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அன்னம் நியமித்தலும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10 மணிக்கு நாராயண சுவாமி பூ வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சுவாமிக்கு திருப்பணிவிடையும், பால் அன்னம் வைத்தலும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருப்பணிவிடையும், தொடர்ந்து 2 மணிக்கு மேல் சுவாமி வீதி உலாவும், பின்னர் தர்மம் வழங்குதலும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர் பொதுமக்கள் செய்து உள்ளார்கள்.