கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தீர்த்தமாடி தரிசனம்
- பக்தர்கள் நெய் விளக்கேற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- விவசாயிகள் தானியங்களையும், காணிக்கை பணத்தையும் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நேற்று ஆடி மாத பதினெட்டாம் பெருக்கு விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை முதல் மாலை வரை அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் சென்று புனித நீராடி, பின்னர் உற்சவர் ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் நெய் விளக்கேற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலில் பக்தர்கள் சந்தனம் சாத்தி, பூ மாலைகளை காணிக்கையாக வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மேலும் விவசாயிகள் தானியங்களையும், காணிக்கை பணத்தையும் செலுத்தினர்.