வழிபாடு

அழகர்மலையில் உள்ள நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்களை படத்தில் காணலாம்.

கள்ளழகர்கோவிலில் 6 மாதங்களுக்கு பிறகு மூலவரை பக்தர்கள் தரிசித்தனர்

Published On 2022-07-29 05:05 GMT   |   Update On 2022-07-29 05:05 GMT
  • நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
  • ராக்காயி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் 3 ஆண்டுக்கு ஒரு முறை திருத்தைலம் சாமிக்கு சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த தை அமாவாசை முதல் ஆடி மாத அமாவாசையான நேற்று வரை 6 மாதங்கள் திருத்தைலம் சாத்துபடி நடைபெற்றது.

இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 27- ந் தேதி வரை பூஜைகள் மூலவருக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று ஆடி அமாவாசையையொட்டி மூலவர் சுந்தரராச பெருமாள், தேவியர்களுக்கு நிறை பூமாலை, பரிவட்டம், வஸ்திரம், சாத்தப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை வழக்கம் போல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி மூலவர், உற்சவர் சாமிகளை தரிசனம் செய்தனர்.

மேலும் அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள உற்சவர் ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவிலிலும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தன.

அழகர் மலை அடிவாரத்தில் உள்ள காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி எலுமிச்சம் பழம், சந்தனம், பூ மாலைகளை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News