ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில்

நினைத்ததும் முக்தி தரும் தலம் திருவண்ணாமலை

Published On 2020-12-05 05:19 GMT   |   Update On 2020-12-05 05:19 GMT
முக்தி தலங்கள் ஐந்தினுள் அண்ணாமலை அப்பனே என அவரவர் இருந்த இடத்தில் இருந்தவாரே மனமுருகி நினைத்தவுடனே முக்தி அளிக்க வல்ல சிறப்புக்குரியது திருவண்ணாமலை.
நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்திற்கு நிகரான பேறு பெற்ற ஆலயம் திருவண்ணாமலை. முக்தி தலங்கள் ஐந்தினுள் அண்ணாமலை அப்பனே என அவரவர் இருந்த இடத்தில் இருந்த வாரே மனமுருகி நினைத்தவுடனே முக்தி அளிக்க வல்ல சிறப்புக்குரியது.

மகா சிவராத்திரி தோன்றிட காரணமாக திகழ்ந்ததும், தமது உடலில் பாதியை அன்னை பார்வதி தேவிக்கு அருளி உமையொரு பாகனாக காட்சியளித்த பெருமைக்குரியதும் இத்திருத்தலமே. முக்திபுரி, சிவலோகம், தலேச்சுரம், சுத்த நகரம், கவுரி நகரம், சோணாச்சலம், சோணாத்திரி, அருணாத்திரி, அருணாச்சலம், அக்னிகிரி, திருவருணை, திருவண்ணாமலை இப்படி பல திருநாமங்களை தாங்கி நிற்கும் தவபூமி. இப்புண்ணிய சேத்திரத்தின் புராதன புனித பெயர் அண்ணா. இந்நகரை சுற்றியிருந்த பகுதிகளை சேர்த்து அக்காலத்தில் இதனை அண்ணா நாடு என மக்கள் அழைத்து வந்தனர்.

இதன் காரணமாகவே இங்குள்ள மலையும் அண்ணாமலை என்றும், இறையனார் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருளாட்சி பூமி என்பதால் திருவண்ணாமலை எனவும் வழங்கப்படுகிறது.

கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும், இக்கலியுகத்தில் கல்மலையாகவும் தோன்றி அருளாட்சி புரிந்து வருகிறார்.
Tags:    

Similar News