ஆன்மிகம்
மலையப்பசாமி ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

திருப்பதி பிரம்மோற்சவ விழா: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

Published On 2019-10-04 05:32 GMT   |   Update On 2019-10-04 05:40 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் மலையப்பசாமி, “ராஜமன்னார்” அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில், உற்சவரான மலையப்பசாமி உபயநாச்சியார்களுடன், “ராஜமன்னார்” அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ணா, ராமா, மாதவா, கேசவா, மலரவா, மாயவா, பரந்தாமா, பத்மநாபா என மகாவிஷ்ணுவின் திருநாமங்களை கூறி தரிசனம் செய்தனர். பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள் அணிவகுத்து ஊர்வலமாகச் சென்றன. கூம்பு வடிவ இசைக்கருவிகள், புல்லாங்குழல் உள்ளிட்ட மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைப்பட்டது. கேரள செண்டை மேளம், ஐதராபாத் பாண்டு வாத்தியம் ஆகியவை இசைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடி சென்றனர்.

ஆண், பெண் பக்தர்கள் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடன், காளி உள்பட பல்வேறு சாமி வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். கோலாட்டம், பரத நாட்டியம், நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடந்தது.

அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை திருமலை நாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இதையடுத்து உற்சவர்கள் வாகன மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு உற்சவர்களுக்கு பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதி பிரவீன்குமார், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பேஷ்கார் லோகநாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 5-வதுநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை சிகர நிகழ்ச்சியாக தங்கக் கருட வாகனத்தில் (கருடசேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News