ஆன்மிகம்
ஊஞ்சலில் அங்காளம்மன் அருள்பாலித்ததையும், கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2019-09-30 06:19 GMT   |   Update On 2019-09-30 06:19 GMT
மகாளய அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் வலம்புரி சங்கு மீது அமர்ந்த நிலையில் கோவில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். இரவு 11.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்தனர். இரவு 12.15 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நிறைவு பெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ராமு, ஜோதி அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News