ஆன்மிகம்
அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2019-04-11 08:47 GMT   |   Update On 2019-04-11 08:47 GMT
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை காஞ்சி விஜய கச்சிகொண்ட பாண்டீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த, குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை காஞ்சி விஜய கச்சிகொண்ட பாண்டீசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நந்திபெருமாள், கொடி மரத்துக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் கேடய சப்பரத்தில் வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. 17-ந் தேதி நடராஜமூர்த்தி வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி வீதி உலாவருதல், 19-ந்தேதி சுவாமி கேடயத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதிஉலா வருதல், சித்ரா பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. 
Tags:    

Similar News