ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை மீனபரணி கொடைவிழா

Published On 2019-04-06 06:40 GMT   |   Update On 2019-04-06 06:40 GMT
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 12-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

தொடர்ந்து 19-ந் தேதி எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதையடுத்து மீனபரணிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 11 மணிக்கு 150 குடங்களில் சந்தன பவனி, நண்பகல் 12.15 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 1 மணியளவில் வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. வலியபடுக்கையின்போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்கள் ஆகியவற்றை பெருமளவில் அம்மன் முன் படையலிட்டு வழிபாடு நடைபெறும்.

இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-ம் நாளன்றும், அம்மன் பிறந்த நட்சத்திரம் என கருதப்படும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டிற்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப் படுகிறது. மீனபரணி கொடையை முன்னிட்டு கேரளா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
Tags:    

Similar News