ஆன்மிகம்
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-03-12 06:05 GMT   |   Update On 2019-03-12 06:05 GMT
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையில் குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் மதுசூதன பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. காலை 8.30 மணிக்கு கொடிபட்டத்தை மேளதாளத்துடன் நான்கு ரதவீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு வந்தனர். 9.20 மணியளவில் மாத்தூர்மடம் தந்திரி சங்கரநாராயணரு கொடி ஏற்றினார். தொடர்ந்து, கொடிமர பீடத்திற்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கோவில் ஸ்ரீகாரியம் ஹரிபத்மநாபன், பறக்கை கூட்டுறவு சங்க தலைவர் கோசலை, மதுசூதனபெருமாள் சேவா சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் வாகன பவனி, பக்தி பஜனை, இன்னிசை கச்சேரி, தோல் பாவை கூத்து, ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 20-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகமும், சேவா சங்கத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News