ஆன்மிகம்
சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தபோது எடுத்த படம்.

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு

Published On 2018-12-31 03:49 GMT   |   Update On 2018-12-31 04:16 GMT
மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு வருகிற 5-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் மிகவும் முக்கியமானவை. மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. இதையடுத்து அன்று இரவு நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்றைய தினம் மற்ற விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். புகழ்பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந் தேதி மாலையில் நடைபெறுகிறது.

இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது.

16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்களும், இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருவதால், இதுவரை இளம்பெண்கள் யாரும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

மகரவிளக்கு பூஜை காலத்திலும் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபரிமலையில் மோதலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிவேக அதிரடிப்படை போலீசாரும், கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலையில் தொடர் போராட்டம் காரணமாக அங்கு பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் முதல் சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த தடை உத்தரவு விலக்கப்படவில்லை. பல முறை நீடிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை, தற்போது வருகிற 5-ந் தேதி வரை மீண்டும் நீடித்து பத்தனம்திட்டா கலெக்டர் நூகு உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

Similar News