ஆன்மிகம்
பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்களை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2018-05-22 06:07 GMT   |   Update On 2018-05-22 06:07 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், பக்தி இன்னிசை கச்சேரி, வாகன பவனி போன்றவை நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலையில் கன்னியாகுமரி செந்திலாண்டவர் பாத யாத்திரை குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசுவரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7 மணிக்கு கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவிலில் பால் குடம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல் ஆகியோர் பால்குடத்தை நிரப்பினர்.

காலை 9.30 மணிக்கு சிங்காரி மேளத்துடன் 251 பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

அங்கு அம்மனுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், களபம், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 11 மணிக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலையில் தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றன. பால்குட ஊர்வலத்தில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு தலைவர் நாகேஸ்வரி சந்திரன், நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News