ஆன்மிகம்
மஞ்சமலை அய்யனார்சாமி கோவில் திருவிழாயொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்.

மஞ்சமலை அய்யனார்சாமி கோவில் திருவிழா

Published On 2018-02-20 03:31 GMT   |   Update On 2018-02-20 03:31 GMT
மஞ்சமலை அய்யனார்சாமி கோவில் திருவிழா 11 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறுகிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது.
பாலமேடு அருகே உள்ள பிரசித்திபெற்ற வலையபட்டி மஞ்சமலை அய்யனார்சாமி கோவில் திருவிழா கடந்த 11 வருடங்களுக்கு பின்னர் நடைபெற உள்ளது. இதற்காக பாரம்பரிய வழக்கப்படி அங்குள்ள அரண்மனையாரிடம் பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் பூஜை பொருட்களுடன் கிராமத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

பின்பு அரசம்பட்டியில் உள்ள மந்தைதிடலில் யாக பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் உள்பட திரவிய பொருட்களால் முகூர்த்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவிலின் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சாமி சிலைகள், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செய்வதற்கான திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது. விழாவில் அரண்மனையார்கள், பூசாரிகள் கிராம முக்கியஸ்தர்கள், தொகுதி எம்.எல்.ஏ., இந்துஅறநிலையதுறை அதிகாரிகள், வருவாய்துறையினர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வலையபட்டி, அரசம்பட்டி, லக்கம்பட்டி, சல்லிகோடாங்கிபட்டி, புதூர் ஆகிய கிராம மக்கள் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News