ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை நடந்த போது எடுத்த படம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2018-02-18 03:09 GMT   |   Update On 2018-02-18 03:09 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி மாத பூஜை நேற்றுடன் நிறைவு பெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்கள் தவிர, முக்கிய விழா நாட்களின் போதும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் (13-ந் தேதி) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் நெய் அபிஷேகம் நடைபெற்று வந்தது.

பிரசித்தி பெற்ற படி பூஜை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நேற்று முன்தினம் இரவில் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2034-ம் ஆண்டு வரை முன் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகள் நேற்று இரவுடன் நிறைவு பெற்றன.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News