ஆன்மிகம்

வருடம் தோறும் வளரும் அதிசய லிங்கம்

Published On 2018-01-09 10:06 GMT   |   Update On 2018-01-09 10:06 GMT
பூதேஸ்வர் மகாதேவ் என்னும் கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாமல் உள்ளது.
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் காரியாபந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்குள்ள மரோடா என்ற கிராம பகுதியில் உள்ள காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவுள்ள சுயம்பு சிவலிங்கமாக இது சொல்லப்படுகிறது.

உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. சுற்றுப்புற மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து வழிபட்டு செல்வதாக கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதன் உயரம் 18 அடியாகவும், சுற்றளவு 20 அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.



இந்த சிவலிங்கத்தின் அளவானது ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோவிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 6 அங்குலம் முதல் 8 அங்குலம் வரையிலும் அந்த சிவலிங்கம் வளர்ச்சி பெற்று வருவது அறியப்பட்டுள்ளது என்று அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், சுற்றிலுமுள்ள 17 கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘மக்கள் சபை’ அமைத்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.

பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952-ம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை அதன் உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லால் தாமாக உருவான சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாமல் உள்ளது.
Tags:    

Similar News