ஆன்மிகம்
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடைமாலை சாத்துவது ஏன்?
ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ராமன்- ராவணன் யுத்தம் நடந்த போது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றுள்ளார். அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார். சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.
அதுபோல, வெண்ணெய் விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம் நிறைவேறும். இதனாலேயே பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்கின்றனர்.
வடைமாலை சாத்துவது ஏன்?
நவக்கிரகங்களின் அங்கமாக விளங்கும் ராகுவும், சனியும் ஒரு முறை ஆஞ்சநேயரிடம் தோல்வி அடைந்து உள்ளனர். அதனால், அவர்கள் ஆஞ்சநேயருக்கு கீழ் படிந்தவர்களாக உள்ளனர். புவியில் சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அவர்களை திருப்திப் படுத்தும் வகையில், அவர்களுக்கு ராகுவுக்கான உளுந்தும், சனிக்கான எள் எண்ணையும் சேர்த்து செய்த வடைமாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு நடத்தலாம். அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம். அதன் காரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
நோய் தீர்க்கும் துளசி தீர்த்தம்
ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு துளசி தீர்த்தமும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.