ஆன்மிகம்
மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட ‘மை’ நடராஜருக்கு வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

Published On 2018-01-03 04:09 GMT   |   Update On 2018-01-03 04:09 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி, நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. நேற்று முன்தினம் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜையும், பவுர்ணமி பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10.45 மணிக்கு தொடங்கிய பவுர்ணமி நேற்று காலை 8.30 மணிக்கு நிறைவடைந்தது.

பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையொட்டி நேற்று காலை சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.


ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதியை படத்தில் காணலாம்.

அதைத் தொடர்ந்து சாமிக்கு கடந்த மாதம் 2-ந் தேதி மகா தீபம் அன்று அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தீப மை பிரசாதம் இன்று (புதன்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீபமை பெற்றுக்கொள்ளலாம். நேரில் பெற முடியாதவர்களுக்கு தபால் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் அதிகாரி தெரிவித்தார்.
Tags:    

Similar News