ஆன்மிகம்
அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Published On 2017-08-23 04:38 GMT   |   Update On 2017-08-23 04:38 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் ஆவணி மாதத்திற்கான அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து உற்சவ அம்மன் முகம் பார்க்கும் கண்ணாடியில் சிகை அலங்காரம் செய்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டார். பின்னர் இரவு 11 மணி அளவில் அம்மன் வடக்கு வாயில் வழியாக பம்பை, மேளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் தாலாட்டு பாடல்களை பாடியவுடன் அம்மனுக்கு அர்ச்சனையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News