ஆன்மிகம்
சோலைமலையில் ஆடிக்கார்த்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

திருப்பரங்குன்றம், சோலைமலையில் ஆடிக்கார்த்திகை திருவிழா

Published On 2017-08-16 05:30 GMT   |   Update On 2017-08-16 05:30 GMT
திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவிலில் ஆடிக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிக்கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். வருடத்தின் 12 மாதமும் கார்த்திகை விழா கொண்டாடப்பட்ட போதிலும், ஆடிக்கார்த்திகைக்கு சாமி எழுந்தருளுவதற்கு என்று சன்னதி தெருவில் ஆடிக்கார்த்திகை மண்டபம் அமைந்து இருப்பது இங்கு தனி சிறப்பு. இந்த ஆண்டிற்கான ஆடிக்கார்த்திகை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் உற்சவர் சன்னதியிலிருந்து ஆடிக்கார்த்திகை மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு வந்தார். பின்னர் அங்கு மாலை வரை தங்கி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். இரவு 7 மணிக்கு சாமி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்பு தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து நகர் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பியபடி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பிரசித்தி பெற்ற சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏற்கனவே ஆடி அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்தன. நேற்று ஆடிமாத நிறைவு, ஆடிக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்து மாலை வரை வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு, சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சஷ்டி மண்டபத்திலிருந்து உற்சவர் வெள்ளிமயில் வாகனத்தில் மேளதாளம் முழங்க வெளிப்பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் மதுரை விரகனூர் திருப்புகழ் சபை மற்றும் பழனி பாதயாத்திரை குழு சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News