ஆன்மிகம்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

Published On 2017-07-31 05:28 GMT   |   Update On 2017-07-31 05:28 GMT
சிதம்பரம்கீழ தெருவில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் கீழ தெருவில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து 9 மணிக்கு உற்சவர் மாரியம்மனை ஊர்வலமாக சிதம்பரம் கீழவீதிக்கு பக்தர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இருந்த தேரில் மாரியம்மனை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கீழவீதியை அடைந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது.
Tags:    

Similar News