ஆன்மிகம்

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2017-06-13 10:26 GMT   |   Update On 2017-06-13 10:26 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ந்தேதி பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 7-ந்தேதி பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதில் பல்லாயிரக் கணக் கான பக்தர்கள் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (13-ந்தேதி) நடைபெற்றது. முன்னதாக காலையில் ஜெனகை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதன் பின்னர் காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் தேர் உலா வந்து பிற்பகலில் நிலையை வந்தடைந்தது.

முன்னதாக தேரோட்டத்தை மாணிக்கம் எம்.எல்.ஏ., கோவில் பட்டர் கணேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் காளிதாஸ், ராஜேஷ்கண்ணா, போலீஸ் டி.எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

நாளை (புதன்கிழமை) தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
Tags:    

Similar News