ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் 1-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-05-25 07:34 GMT   |   Update On 2017-05-25 07:34 GMT
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நம்பெருமாள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நம்பெருமாள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. வசந்த உற்சவத்தின்போது தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வசந்த மண்டபம் சென்றடைவார்.

கோவில் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்குபுறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி இருக்கும்போது மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்படும். மண்டபம் முழுவதும் பொலிவுடன் காட்சியளிக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும்.



9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஏழாம் நாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுவதும், ஒன்பதாம் திருநாளன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வதும், தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருள்வதும் சிறப்பம்சமாகும். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் ‘சூர்ணாபிஷேகம்’ என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

வசந்த உற்சவத்தின்போது 7-ந்தேதி தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு.
Tags:    

Similar News