ஆன்மிகம்
உளுந்தூர்பேட்டை அருகே லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2017-05-18 08:36 GMT   |   Update On 2017-05-18 08:36 GMT
உளுந்தூர்பேட்டை அருகே லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. வைணவ தலங்களில் புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி தொடங்கியது. அன்று காலை சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மறுநாள் 9-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், இரவு சிம்மம், யானை, குதிரை போன்ற தனித்தனி வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதிஉலாவும் நடந்தது. கடந்த 14-ந் தேதி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான வசந்த உற்சவம் நடைபெற்றது.



பின்னர், பிரம்மோற்சவத்தில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதன் பின்னர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, அங்குகூடி நின்ற திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருநாவலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News