ஆன்மிகம்
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு தீபாராதனை நடைபெற்றது.

பழனி முருகன் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை விழா

Published On 2017-04-28 03:48 GMT   |   Update On 2017-04-28 03:48 GMT
பழனி முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இதில் 86 பேர் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், விஸ்வரூப தரிசனமும், காலை 6.30 மணிக்கு விளா பூஜையும், 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு கால சந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது.

விளா பூஜையில் முருகனுக்கு சாது அலங்காரமும், சிறு காலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், ராஜ அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும், 16 வகை தீபாராதனையும், 16 வகை உபசாரங்களும் நடைபெற்றது. முருகனின் ராஜ அலங்காரத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பங்குனி மாத கார்த்திகை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

மாலை 6 மணிக்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 6.40 மணிக்கு உட்பிரகாரத்தில் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று இரவு 7.15 மணிக்கு தங்கரதத்தில், சின்னக்குமாரர் எழுந்தருளி வெளிப்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 86 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு வெள்ளைநிற மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Similar News