ஆன்மிகம்
கருமாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்

மாரியம்மன் கோவில்களில் கொடை விழா: பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

Published On 2017-04-19 04:29 GMT   |   Update On 2017-04-19 04:29 GMT
மும்பையில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கொடை விழா நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மும்பை தாராவி தேவர் நகரில் உள்ள கருமாரியம்மன் கோவிலில், கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். 1 மணிக்கு மதிய பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நள்ளிரவு 12 மணிக்கு ஆசார பூஜை நடந்தது. கோவிலில் காலை முதல் வில்லிசை கச்சேரி நடைபெற்றது. விழாவில் கோவில் தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், தர்மகர்த்தா சுப்பையா தேவர், கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) அதிகாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

இதேபோல், தாராவி டோர்வாடாவில் உள்ள மகமாயி மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் மாகிம் கடற்கரையில் இருந்து பால்குடம், தீச்சட்டி மற்றும் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பின்னர் கோவிலில் மதியம் சாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு பூஜைகளும் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மும்பை காட்கோபர் கிழக்கு, காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. மதியம் பந்த்நகர் ஆச்சார்யா மைதானத்தில் இருந்து பால்குடம், அலகு, காவடி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் காமராஜ் நகருக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு தீக்குண்டம் மிதித்து கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News