ஆன்மிகம்

திருவண்ணாமலையில் உள்ள சித்தரை தரிசிக்க வேண்டுமா?

Published On 2017-04-10 09:02 GMT   |   Update On 2017-04-10 09:02 GMT
மனக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மிக எளிதாக பார்க்கும் வகையில் ஒரு சித்தப்புருஷர் தற்போது வசித்து வருகிறார்.
திருவண்ணாமலை என்றதுமே ஈசனுக்கு அடுத்த படியாக நம் நினைவுக்கு வருபவர்கள் சித்தர்கள்தான். திருவண்ணாமலை மலையில் தற்போதும் ஏராளமான சித்தர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களால் அவர்களை நேரில் பார்த்து தரிசனம் செய்ய இயல்வதில்லை.

அந்த மனக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மிக எளிதாக பார்க்கும் வகையில் ஒரு சித்தப்புருஷர் தற்போது வசித்து வருகிறார். திருவண்ணாமலை கோவில் அருகில் நகரத்தார்களின் சாதுக்கள் மடத்தில் அந்த சித்தர் உள்ளார். அந்த சித்தரை மூக்குப் பொடி சித்தர் என்று சொல்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த சித்தர் மின்சார கம்பத்தில் ஏறி மின் கம்பி மீது நடந்து சென்றாராம். இதை பார்த்து திருவண்ணாமலையே பரபரப்பானது. அதன் பிறகே மூக்குப்பொடி சித்தரின் மகிமை மற்றவர்களுக்கு தெரிய வந்தது. தற்போது தினமும் அவரை பார்த்து ஆசி பெற ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆனால் மூக்குப்பொடி சித்தர் யாரிடமும் பேசுவதில்லை.

அவர் பார்வைபட்டாலே தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கையில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் சித்தருக்கு மூக்குப்பொடியை வாங்கி வந்து காணிக்கையாக கொடுக்கிறார்கள். இந்த சித்தர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் எப்போது எப்படி திருவண்ணாமலைக்கு வந்தார் என்பதும் தெரியவில்லை.

Similar News