ஆன்மிகம்
ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Published On 2017-03-29 08:55 GMT   |   Update On 2017-03-29 08:55 GMT
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் வரும் அமாவாசையில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி பங்குனி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

உற்சவ அம்மனுக்கு பவதாரணி அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


அங்காளம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

இரவு 11.30 மணிக்கு உற்சவ அம்மன் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நிறைவு பெற்றது.

Similar News