ஆன்மிகம்
கல்யாண வெங்கடேஸ்வரருக்கு வண்ண வண்ண மலர்களால் புஷ்பயாகம் நடந்தபோது எடுத்தபடம்.

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம்

Published On 2017-03-25 08:33 GMT   |   Update On 2017-03-25 08:33 GMT
ஆந்திர மாநிலம் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்பயாகம் 6 டன் வண்ண மலர்களால் நடத்தப்பட்டது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சந்திரகிரி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம், நித்யகைங்கர்யம் நடக்கும்போது ஏதேனும் தோஷம் இருந்தால் அதனை போக்குவதற்காக இந்த புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று இந்த யாகம் நடந்தது. இதனையொட்டி கல்யாண வெங்கடேஸ்வரர் தேவியருடன் திருமண மண்டபத்தில் உள்ள யாகசாலை நடக்கும் இடத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.



அதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரருக்கு 18 வகையான 6 டன் மலர்களால் புஷ்பயாகம் நடந்தது. அப்போது கூடை கூடையாக பூக்கள் கொண்டு வரப்பட்டு வேதமந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் இதனை நடத்தினர்.

கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலுக்கு திருப்பதியை சேர்ந்த சீனிவாசரெட்டி என்ற பக்தர் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள பெரிய மணி ஒன்றை வழங்கினார். இதனை கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டனர்.

Similar News