ஆன்மிகம்
பழனி அருகே மானூர் சண்முக நதியில் காவடிகளை வைத்து எடப்பாடி பக்தர்கள் சிறப்பு பூஜை செய்த காட்சி.

பழனி முருகன் கோவிலுக்குமயில், இளநீர் காவடிகளுடன் வந்த எடப்பாடி பக்தர்கள்

Published On 2017-02-17 08:10 GMT   |   Update On 2017-02-17 08:10 GMT
தைப்பூச திருவிழாவையொட்டி மயில், இளநீர் காவடிகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எடப்பாடி பக்தர்கள் வந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திரு விழா, கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதியுடன் நிறைவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஸ்ரீ பருவத ராஜ குல சமுதாய மக்கள் தைப்பூசத் திருவிழாவிற்காக பழனி முருகன் கோவிலுக்கு வருவது வழக்கம் ஆகும்.

கடந்த 360 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் பழனிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி, வெள்ளாண்டி வலசை, பழைய பேட்டை, புதுப்பேட்டை, கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று பழனிக்கு வந்தனர்.

முன்னதாக மயில் காவடி, தீர்த்தக்காவடி, இளநீர் காவடிகளுடன் எடப்பாடி செல்லியாண்டியம்மன் கோவிலில் இருந்து பழனிக்கு கடந்த 8-ம் தேதி அன்று பாதயாத்திரையாக அவர்கள் புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு பழனியை அடுத்த நரிக்கல்பட்டிக்கு இவர்கள் வந்தடைந்தனர். அங்கு இரவு தங்கிய பக்தர்கள், நேற்று காலை மானூர் சண்முகநதியில் காவடிகளுக்கு மகாபூஜை நடத்தினர்.

பின்னர், கும்பகோணம் காவடிகளுடன் இணைந்து பிற்பகலில் பழனி வந்தடைந்தனர். பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு கோவில் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காவடிகளுக்கு தீபாராதணை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் 4 ரத வீதிகளில் காவடிகளுடன் வலம் வந்தனர்.


பழனி மலைக்கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் எடப்பாடி பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

பின்னர் பெரியகடை வீதி, காந்தி ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதி வீதி வழியாக சென்று படிப்பாதை மூலம் பழனி மலைக்கோவிலை அடைந்தனர். அங்கு காவடிகளுடன் உச்சிக்கால அன்னதானம், சாயரட்சை கட்டளை பூஜை, தங்கரத புறப்பாட்டிலும் கலந்துகொண்டு பழனி முருகனை வழிபட்டனர். மேலும் ராக்கால கட்டளை பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இரவு முழுவதும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி வழிபாடு நடத்தினார்கள். பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்ட எடப்பாடி பக்தர்களுக்காக மலைக்கோவிலில் சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனை அபிஷேகத்துக்கு பிறகு முருகனுக்கு படைத்து வழிபட்டு தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் எடப்பாடி பக்தர்கள் பழனியில் உள்ள சமுதாய மடத்தில் தங்குகின்றனர்.

பின்னர் 20-ந்தேதி (திங்கட்கிழமை) பழனியில் இருந்து காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு 24-ந்தேதி எடப்பாடியை சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பழனியில் இருந்து எடப்பாடிக்கு சுமார் 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

Similar News