ஆன்மிகம்

அமிர்தத்தை இழந்த உதங்க முனிவர்

Published On 2016-12-17 07:50 GMT   |   Update On 2016-12-17 07:50 GMT
உருவத்தில் வேறுபாடு காட்டி, கிடைக்க இருந்த அமிர்தத்தை இழந்த உதங்க முனிவரின் ஆன்மிக கதையை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் சாரதியாகவும், மதியூகியாகவும் சிறப்பாக செயல்பட்டு தர்மத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் கண்ணபிரான். மகாபாரத போர் முடிந்ததைத் தொடர்ந்து, அவர் துவாரகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உதங்க முனிவர் எதிர்பட்டார்.

அவர் கண்ணனை வணங்கி, ‘நலமா?’ என்று விசாரித்தார்.

‘உலகில் எல்லாரும் நலமாக இருந்தால் நானும் நலமாகவே இருப்பேன்’ என்று கூறினார் கண்ணபிரான்.

இதைக் கேட்டதும் உதங்கரின் குரலில் கோபமும் ஆதங்கமும் எட்டிப் பார்த்தன. ‘அது எப்படி எல்லோரும் நலமாக இருக்க முடியும். குருசேத்திரப் போரில் எத்தனை பேர் இறந்திருக் கிறார்கள். அதற்கு தாங்களும் தானே காரணம்?’ என்றார்.

கண்ணன் புன்னகை தவழும் முகத்துடன், ‘நான் யாருடனும் போரிடவில்லை. யாரையும் தாக்கவில்லை. பின் எப்படி இறப்புகளுக்கு நான் பொறுப்பாக முடியும்?. மேலும் பிறப்பும், இறப்பும் இயல்பானது என்பது உங்களுக்கு தெரியாதா?’ என்று கேட்டார்.

கிருஷ்ணரின் விளக்கம்

‘நீங்கள் போரிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மனது வைத்திருந்தால் போரே நடைபெறாமல் தடுத்திருக்கலாம். ஒரு இறப்பு கூட இல்லாமல் தவிர்த்திருக்கலாம். இயல்பான இறப்பாக இருந்தால் சரி. ஆனால் இப்போது நடைபெற்ற இறப்பு அப்படியல்லவே!’ என்று மீண்டும் கண்ணபிரான் மீது குற்றம் சாட்டினார் உதங்க முனிவர்.

அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை எடுத்துரைத்தது போல், உதங்கருக்கும் மற்றொரு கீதையை உபதேசிக்கும் படி ஆகிவிட்டது கண்ணனுக்கு. போருக்கு முன்பாக கவுரவர்களை சந்தித்து ராஜ்ஜியத்தில் பாதியை கொடுத்தால் போரை தவிர்த்து விடலாம் என்று தான் கேட்டுக் கொண்டது, அதற்கு கவுரவர்கள் சம்மதிக்காமல் இழிவு படுத்தியது, தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்த போரை நிகழ்த்தியது என்பது வரை கூறி முடித்தார் கிருஷ்ணர்.

உதங்கருக்கு உண்மை புரிந்தது. ‘கண்ணா! என்னையும் மதித்து இவ்வளவு பெரிய விளக்கம் அளித்தீர்களே!’ என்று கண் கலங்கினார். கண்ணனின் விளக்கத்தில் மெய்சிலிர்த்த உதங்கர், ‘உங்கள் விஸ்வரூப தரிசனத்தை காண வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

வரம் கொடுத்தார் :

அதன்படியே தனது விஸ்வரூபத்தை காட்டி அருளினார் கண்ணன். மேலும் வேறு என்ன வரம் வேண்டும்? என்று விஷமமாக கேட்டார்.

‘இதை விட வேறு என்ன வேண்டும்?’ என்று நெஞ்சுருகி நின்ற உதங்கரிடம், விடாப்பிடியாக வேறு ஏதாவது கேட்கும்படி கூறினார் கிருஷ்ண பகவான்.

அவரது வற்புறுத்தலால், ‘நான் வேண்டும் போது எனக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்’ என்று வரம் கேட்டார் உதங்கர்.

அவ்வாறே அருள்புரிந்து அங்கிருந்து சென்றார் கண்ணன்.

ஒரு முறை பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார் உதங்க முனிவர். அப்போது அவருக்கு பயங்கர தாகம் ஏற்பட்டது. கரம் குவித்து கண்ணனை பிரார்த்தனை செய்தார்.

அருவறுப்பான உருவம் :

அப்போது அந்த வழியாக அருவறுப்பு கொள்ளச் செய்யும் தோற்றத்துடன், முகம் சுளிக்கும்படியாக ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் தன் கையில் இருந்த குவளையை உதங்கரிடம் நீட்டி, ‘ஐயா! தாங்கள் தாகமாக இருப்பதாக நான் அறிகிறேன். இந்த தண்ணீரை அருந்தி உங்கள் தாகத்தை தணித்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறினார்.

உதங்கரோ, எதிர்பட்டவரின் உருவத்தை கண்டு வெறுப்பு கொண்டார். ‘தண்ணீர் வேண்டாம்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவரது மனம் மிகவும் சினம் கொண்டிருந்தது. ‘கண்ணா! நீ ஒரு குற்றவாளி. என்னை ஏமாற்றி விட்டாய். வரத்தை கொடுத்து விட்டு, அதனை பயன் படுத்த முடியாதபடி செய்து விட்டாய்!’ என்று சத்தமாக கூறி கண்ணனை நிந்தனை செய்தார் உதங்கர்.

கண்ணன், உதங்கர் இருந்த பாலைவனத்திற்கு விரைந்து வந்தார். ‘முனிவரே! என் மீது உங்களுக்கு என்ன கோபம்?. நான் தான் கொடுத்த வரத்தின்படி உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்தேனே! தாங்கள் தானே அதனை வேண்டாம் என்று கூறி மறுத்தீர்கள்!’ என்று கேட்டார்.

‘கண்ணா! நீ பேச்சில் சாமர்த்தியம் காட்டுகிறாய். நான் கேட்ட தண்ணீரை கொடுத்தனுப்புவதற்கு உனக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா? என்னை அவமதிப்பதற்காகவே அருவறுப்பு மிகுந்த ஒருவனிடம் தண்ணீரை கொடுத்து அனுப்பியிருக்கிறாய்!’ என்று ஆதங்கத்துடன் கூச்சல் போட்டார் உதங்க முனிவர்.

‘என்னை ஏமாற்றி விட்டீர்கள் உதங்கரே! நீங்கள் பேதங்களை கடந்தவர், மேம்பட்டவர் என்று எண்ணியிருந்தேன். அனைத்தும் பொய்யாகப் போய்விட்டது’ என்றார் கண்ணன்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மவுனமானார் உதங்கர்.

இந்திரன் சோதனை :

‘உங்களுடைய தாகத்தை தணிக்க, தண்ணீருக்கு பதிலாக நான் அமிர்தத்தை வழங்கவே முடிவு செய்திருந்தேன். அதை நிறைவேற்றும்படி இந்திரனை அழைத்து உத்தரவும் பிறப்பித்தேன். ஆனால் அவனோ தயங்கிய படியே அமிர்தத்தை அளிக்கும் அளவுக்கு உதங்கர் உயர்ந்தவரா? என்று கேட்டான். நானோ அவர் மிகப்பெரிய ஞானி என்றுரைத்தேன்.

அதற்கு இந்திரனோ, அப்படியானால் அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று கூறி அருவறுப்பு கொள்ளத்தக்க வடிவில் உங்களிடம் அமிர்தத்தை கொண்டு வந்து கொடுத்தான். உருவத்தில் வேறுபாடு காட்டி, கிடைக்க இருந்த அமிர்தத்தை இழந்து விட்டீர்கள் உதங்கரே!. அத்துடன் என்னையும் ஏமாற்றி விட்டீர்கள்!’ என்று கூறி விட்டு அங்கிருந்து மறைந்தார் கண்ணன்.

தான் செய்த தவறை உணர்ந்து வருந்தியபடி தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தார் உதங்க முனிவர்.

Similar News