ஆன்மிகம்

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்

Published On 2016-10-03 03:53 GMT   |   Update On 2016-10-03 03:53 GMT
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும், சிறப்பு ஹோமமும் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், கொடியேற்றமும் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஆயிரத்தம்மன், முப்புடாதி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், தூத்துவாரி அம்மன், யாதவர் உச்சிமாகாளி, விசுவகர்மா உச்சிமாகாளி, கிழக்கு உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி ஆகிய 11  அம்மன் கோவில்களில் இருந்தும் தாமிரபரணி ஆற்றிற்கு சென்று கிரக குடம் எடுத்து வரப்பட்டது. அனைத்து அம்மன் கோவில்களில் இருந்து அம்மன் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. சப்பரங்கள் அந்ததந்த பகுதிகளில் பவனி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 11–ந் தேதி தசரா திருவிழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு ஆயிரத்தம்மன், பேராச்சி அம்மன், முப்புடாதி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், தூத்துவாரி அம்மன், யாதவர் உச்சிமாகாளி, விசுவகர்மா உச்சிமாகாளி, கிழக்கு உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி ஆகிய கோவில்களிலும் காலையில் சிறப்பு ஹோமபூஜையும், பால்குட ஊர்வலமும் நடக்கிறது.

12–ந்தேதி காலை 10 மணிக்கு 12 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவிலில் அணிவகுத்து நிற்கும். பகல் 2 மணிக்கு ராமசாமி கோவில் திடலிலும், இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் திடலிலும் அணிவகுத்து நிற்கும். நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து சப்பரங்களும் பாளையங்கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நிற்கும். அப்போது ஆயிரத்தம்மன், மகிசாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

Similar News