சினிமா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறைஅசாதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், அதுபற்றி விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். #VijaySethupathi
நடிகர் விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர். அவர் நடித்த பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றி அடைந்ததால் முன்னணி நடிகர் ஆனார்.
கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிப்பதோடு மட்டுமல்லாமல் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவர் நடித்து தயாரித்த ஜுங்கா படம் கடந்த மாதம் வெளியானது. நேற்று முன் தினம் செக்கச் சிவந்த வானம் படம் வெளியாகி பாராட்டுகள் பெற்று வருகிறது.
விஜய் சேதுபதியின் வீடு கீழ்ப்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக நேற்றுமாலை செய்தி பரவியது. இதனை அடுத்து அவரது வீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் குவிந்தனர்.
ஆனால் வருமான வரித்துறையினர் யாரும் அங்கு இல்லை. அடுத்து யார் வீட்டுக்கு வருவார்கள்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் பேசினோம். ‘எங்கள் வீட்டில் நடந்தது சோதனை அல்ல. வெறும் ஆய்வு தான். சில ஆண்டுகளாக எனக்கு வரி விவரங்களை பார்த்துக்கொண்ட ஆடிட்டரால் ஏற்பட்ட சின்ன குழப்பம். அந்த குழப்பத்தை போக்கிக்கொள்ள வருமான வரித்துறையினர் வந்தனர். குழப்பம் தீர்ந்ததால் சென்றுவிட்டனர். நான் குடும்பத்துடன் லக்னோ சென்றுவிட்டு நேற்று மதியம் தான் திரும்பினோம். வருமானத்தை நேர்மையாக கணக்கு காட்டி வரிகளை சரியாக செலுத்தி வருகிறேன் என்றார். #VijaySethupathi