சினிமா
ரஜினிக்கு மிகவும் பிடித்த தலைவர் அவர்தான் - பா.ரஞ்சித்
தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துக் கொண்ட பா.ரஞ்சித், ரஜினிக்கு மிகவும் பிடித்த தலைவர் யார் என்று கூறியிருக்கிறார். #PaRanjith
தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது:-
என் தந்தை தீவிர தி.மு.க. ஆதரவாளர். என்னுடைய தாத்தா பஞ்சாட்சரம் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அவருடனும் பயணம் செய்திருக்கிறேன்.
அவர் கலைஞரின் தீவிர ரசிகர். முக்கியமாக கலைஞரின் பராசக்தி வசனங்களை பேசி காட்டி மகிழ்வார். பராசக்தி படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டி. தி.மு.க. இந்த அளவுக்கு மக்களிடத்தில் கொண்டு செல்ல காரணம் கலைஞர் நாடகம், திரைப்படங்களை பயன்படுத்தியது தான்.
ரஜினி என்னிடம் அவருக்கு மிகவும் பிடித்த தலைவர் என்று கலைஞரை கூறினார்.
நான் பார்த்து வியந்த மனிதர் கலைஞர் என்றும் அரசியலில் இறங்க முடிவு செய்து அவரை சந்தித்து கூறியபோது ஒருதுளி கண்ணீர் வந்தது. அதை நான் ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டேன் என்றும் கூறினார். கலைஞருக்கும் ரஜினிக்குமான பந்தம் உணர்வுபூர்வமானது. அரசியலில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.