சினிமா
ஐபிஎல் போட்டிகள் போல் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? - உதயநிதி கேள்வி
ஐபிஎல் போட்டிகள் போல் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? என்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஐபிஎல் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘ஐபிஎல் போட்டிகள் போல், தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே...” பதிவு செய்திருக்கிறார்.
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக திரைத்துறையினர் நடத்தி வந்த வேலைநிறுத்தம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, விரைவில் படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உதயநிதியின் இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.