சினிமா

உடல் எடையை கூட்ட மறுத்த கீர்த்தி சுரேஷ்

Published On 2017-12-15 15:01 GMT   |   Update On 2017-12-15 15:01 GMT
‘மகாநதி’ படத்துக்காக உடல் எடையை கூட்ட சொன்ன இயக்குனரிடம் மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சாவித்ரி சற்று குண்டான தோற்றம் கொண்டவர். எனவே கீர்த்தி சுரேசையும் உடல் எடையை கூட்டி, குண்டான தோற்றத்துக்கு மாறும்படி, டைரக்டர் நாக்.அஸ்வின் கேட்டுக் கொண்டார். அதற்கு கீர்த்தி சுரேஷ் மறுத்து விட்டார்.

எனவே ‘கிராபிக்ஸ்’ மூலம் கீர்த்தி சுரேசை பருமனாக காட்ட டைரக்டர் நாக்.அஸ்வின் முடிவு செய்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் குண்டு தோற்றத்துக்கு மாற மறுத்ததற்கு அனுஷ்காவே காரணம் என்கிறார்கள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனுஷ்காவுக்கும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. தமிழில், ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரிலும், தெலுங்கில், ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரிலும் தயாரான படத்தில், அனுஷ்காவுக்கு குண்டு பெண் வேடம். அதில் நடிப்பதற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டி, குண்டு பெண்ணாக மாறினார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அனுஷ்கா மீண்டும் ஒல்லியாக பழைய தோற்றத்துக்கு மாற முயன்றார். முடியவில்லை. இதற்காக அவர் பட்டினி கிடந்தார். கடுமையாக உடற்பயிற்சி செய்தார். என்றாலும் அவரால் பழைய ஒல்லி தோற்றத்துக்கு மாற முடியவில்லை. இந்த நிலையில் அவர், ‘பாகுபலி-2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவரை, ‘கிராபிக்ஸ்’ மூலம் டைரக்டர் ராஜமவுலி ஒல்லியாக காண்பித்தார்.

இதை மனதில் வைத்தே கீர்த்தி சுரேஷ், உடல் எடையை கூட்ட மறுத்ததாக கூறப்படுகிறது. ‘மகாநதி’ படத்தில், கீர்த்தி சுரேசுடன் ஏற்கனவே துல்கர் சல்மான், சமந்தா ஆகிய இருவரும் நடித்து வந்தார்கள். இப்போது அந்த படத்துக்காக அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் இந்த படம், வருகிற மார்ச் மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News