சினிமா

நடிகர் வீராவுடனான காதல் குறித்து மனம்திறந்த நமீதா

Published On 2017-11-11 09:50 GMT   |   Update On 2017-11-11 09:50 GMT
‘மியா’ படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரியை நடிகை நமீதா திருமணம் செய்யவுள்ள நிலையில், அவருடனான காதல் குறித்து நடிகை நமீதா மனம் திறந்துள்ளார்.
நடிகை நமீதா அவருடன் ‘மியா’ படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை காதலித்து திருமணம் செய்கிறார்.

இவர்கள் திருமணம் வருகிற 24-ந் தேதி திருப்பதியில் நடைபெறுகிறது. வீராவை காதலித்தது எப்படி? திருமணத்துக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்து நமீதா கூறி இருப்பதாவது:-

வீரா என்னுடைய சிறந்த நண்பர். என் மனதுக்கு மிகவும் இனியவர். அவர் தயாரிப்பாளர் மட்டுமல்ல. ஆர்வம் மிக்க நடிகர்.

எங்கள் நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து பழகினோம். அதன் மூலம் நல்ல நண்பர்கள் ஆனோம். கடந்த செப்டம்பர் 6-ந் தேதி கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு விருந்து நடந்தது.



அப்போது வீரா தனது காதலை வெளிப்படுத்தினார். நான் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் இதை சொன்னதால் நான் மெய் சிலிர்த்துப் போனேன்.

இருவரும் ஆன்மீக விழிப்பு பெற்றவர்கள். எனவே, அவருடைய விருப்பத்துக்கு சம்மதம் சொன்னேன். இயற்கையை ரசித்தல், பயணம், மலையேறுதல் ஆகியவற்றில் பங்கேற்று அன்பை பகிர்ந்து கொண்டோம். இருவரும் விலங்குகளை நேசிப்பவர்கள்.

இருவருக்கும் வாழ்க்கை மீது நேசமும், பற்றும் இருக்கிறது. இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தை பகிர்ந்து கொள்கிறோம். என்னை அவர் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்ததால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

எங்கள் இருவரிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக அவரை மிகவும் புரிந்து கொண்டேன். அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் அதிக அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும் இருவரும் வேண்டுகிறோம்.

இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News