சினிமா

பணத்துக்காக படங்களில் நடிக்க மாட்டேன்: அனுஷ்கா

Published On 2017-10-21 04:57 GMT   |   Update On 2017-10-21 04:57 GMT
பணத்துக்காக மலிவான படங்களில் தான் நடிக்க மாட்டேன் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

“நல்ல கதாபாத்திரங்களில் நடித்து திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு நடிகைகளுக்கு அமைய வேண்டியது முக்கியம். என்னை விட திறமையான நடிகைகள் இருந்தும் அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைத்தன. அதனால்தான் திறமை காட்ட முடிந்தது. சினிமாவுக்காக உயிரை பணயம் வைத்து உழைக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அருந்ததி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் அப்படித்தான் எனக்கு கிடைத்தன. அருந்ததி படம் என் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். அந்த கதாபாத்திரமும் திருப்தியை தந்தது. பாகுபலி படத்தில் இன்னொரு பரிணாமத்தில் வந்தேன்.



இந்த படங்கள் எனது கைவிட்டு போய் இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இவற்றில் என்னைத்தவிர வேறு எந்த நடிகையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. நடிகைகள் தானாகவே திறமையை காட்டி முன்னுக்கு வர முடியாது. ஒவ்வொரு நடிகை திறமைக்கு பின்னாலும் டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் கதாபாத்திரங்களை செதுக்கி சிறப்பாக நடிக்க வைத்து பெயர் வாங்கி கொடுக்கிறார்கள்.

நான் நடிப்பதற்கு முன்னால் கதையையும் டைரக்டர் யார் என்பதையும்தான் முக்கியமாக பார்ப்பேன். கதை எனக்கு பிடிக்க வேண்டும். டைரக்டரும் திறமையானவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல இயக்குனர் படம் எடுத்தால் அதில் நடிக்கும் நடிகைக்கும் பெயர் கிடைக்கும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலிவான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
Tags:    

Similar News