சினிமா

பிரச்சினைகளை கண்டு கலங்க மாட்டேன்: அமலா பால்

Published On 2017-08-14 10:19 GMT   |   Update On 2017-08-14 10:19 GMT
பிரச்சினைகளை கண்டு கலங்க மாட்டேன், சாதிக்க அதிக காலம் இருக்கிறது என்று நடிகை அமலா பால் கூறியிருக்கிறார்.
தனுஷ், அமலாபால், கஜோல் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ திரைக்கு வந்துள்ளது. இதில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அமலாபால்...

“இந்த படத்தில் எனது பாத்திரத்தை அனுபவித்து நடித்திருக்கிறேன். தனுஷ் நல்ல நண்பர். கடுமையான உழைப்பாளி. தன்னுடன் நடிக்கும் மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்று விரும்புவார். அவரிடம் இருந்து புதிய வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன்.

சின்ன வயதில் கஜோல் படங்களை பார்த்து இப்போது அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடைய நடிப்பை நான் நேரில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்துக்காக இயக்குனர் சவுந்தர்யா கடுமையாக உழைத்தார். சின்ன வி‌ஷயங்களில் கூட மிகவும் கவனம் செலுத்தினார்.



விஜய், விக்ரம் ஆகியோருடன் நடித்து விட்டேன். அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அதில் நடிக்க முடியவில்லை. அவரைப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என் வாழ்வில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக நான் கலங்கவில்லை. எனக்கு வயது 25. இன்னும் சாதிக்க காலம் அதிகம் இருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். அனைவருடைய வாழ்க்கையிலும் சோதனை இருக்கும். கடுமையான பிரச்சினைகளையும் நான் சாதாரணமாக எடுத்துக்கொள்வேன்” என்றார்.
Tags:    

Similar News