சினிமா

ரசிகர்களுடன் ரஜினிகாந்த் 2-வது நாளாக சந்திப்பு

Published On 2017-05-16 04:57 GMT   |   Update On 2017-05-16 04:57 GMT
ரஜினி இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிவு செய்தார். அனைத்து மாவட்ட  ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் மூன்று மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

நேற்று கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படம்  எடுத்துக் கொண்டார். ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியபோது, அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிட்டார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.



இன்று 2-வது நாளாக புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தை சேர்ந்த 750 ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். சரியாக காலை 9 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரஜினி வந்தார். இன்று வெள்ளை ஜிப்பா அணிந்து இருந்தார்.

மேடையில் உள்ள நாற்காலியில் ரஜினி உட்கார்ந்து இருந்தார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் வரிசைப்படி ரஜினி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாளை விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்.

Tags:    

Similar News