சினிமா

திரையுலக தொழிலாளர்கள் 100 பேருக்கு தலா ஒரு சவரன் தங்கம் பரிசு: விஜய் சேதுபதி அறிவிப்பு

Published On 2017-04-11 10:02 GMT   |   Update On 2017-04-11 10:02 GMT
திரையுலக தொழிலாளர்கள் 100 பேருக்கு தலா ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்தை இலவசமாக அளிக்கப்போவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உலகாயுதா என்ற பவுண்டேசனை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பவுண்டேஷன் மூலம் சினிமா கலைஞர்களுக்கு தங்கம் கொடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, கலைஞர்களுக்கு கொடுக்கும் தங்கத்தை தான் இலவசமாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலகாயுதா என்ற பவுண்டே‌ஷனை ஜனநாதன் சார் தொடங்கி நடத்தி வருகிறார். அதன் மூலம் 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தங்கம் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அதை நானே என் செலவில் கொடுக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.

எனக்கு எல்லாமே சினிமாதான். எனக்கு எல்லாம் கொடுத்ததும் சினிமாதான். இந்த சினிமாவில் இருக்கிற தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு நிறையவே செய்து இருக்கிறார்கள். எனக்கு கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த சிறிய நன்றி கடனாக இதை நினைக்கிறேன்.

பெப்சியில் உள்ள 23 சங்கங்கள் மூலம் 100 மூத்த சினிமா தொழிலாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் கொடுக்கிறோம். மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் இந்த தங்கம் வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் சிறிய அளவில்தான் கொடுக்கிறேன். நூற்றாண்டு காணும் சினிமா உலக கலைஞர்களுக்கு தங்கம் கொடுப்பதை ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறோம்” என்றார்.

Similar News